அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை விரைவில் 16 கோடியை எட்டும் - அதிபர் ஜோ பைடன்


அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை விரைவில் 16 கோடியை எட்டும் - அதிபர் ஜோ பைடன்
x
தினத்தந்தி 7 July 2021 5:29 PM GMT (Updated: 7 July 2021 5:29 PM GMT)

அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் 16 கோடியை எட்டும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

கொரோனா வைரசால் உலக அளவில் அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அந்நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 33,12,14,347 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் இதுவரை 18,27,14,064 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 15,76,36,088 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் இந்த வார இறுதிக்குள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 16 கோடியை எட்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் துரிதப்படுத்தியதால் தான் வெறும் 5 மாதத்தில் கிட்டத்தட்ட 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிந்தது. நான் பதவிக்கு வரும்போது வெறும் 30 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது. 

இந்த வார இறுதிக்குள் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை 16 கோடியை எட்டியிருக்கும். தற்போது வரை சுமார் 18 கோடியே 20 லட்சம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். அதில் 90 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் மற்றும் 70 சதவீதம் பேர் 27 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story