பாக்தாத் அமெரிக்க தூதரகத்தின் மீது அதிகாலை ராக்கெட் தாக்குதல்


பாக்தாத் அமெரிக்க தூதரகத்தின் மீது அதிகாலை ராக்கெட் தாக்குதல்
x
தினத்தந்தி 8 July 2021 5:17 AM GMT (Updated: 8 July 2021 5:17 AM GMT)

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இன்று அதிகாலை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாக்தாத்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அப்போது தொடங்கி இப்போது வரை ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகள் மீதும், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த‌ தாக்குதல்களுக்கு பதிலடி தரும் விதமாக அண்மையில் அமெரிக்க ராணுவம் ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் கூறி இருந்தனர். 

இந்த நிலையில் பாக்தாத்தின் பசுமை மண்டலத்திற்குள் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று  அதிகாலை இரண்டு ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதுபோல் மேற்கு ஈராக்கில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத் தளம் மீது நடந்த இந்த ராக்கெட் தாக்குதலில் இரண்டு பேர்  காயமடைந்ததாக கூட்டணி  அமெரிக்க ராணுவ கேணல் வெய்ன் மரோட்டோ தெரிவித்தார்.

சிரியாவில், ஈராக்கின் எல்லையில் உள்ள கிழக்குப் பகுதியில் அல் ஒமர் எண்ணெய் வயல் மீது ஆள் இல்லா விமான  தாக்குதல் நடத்தியதால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அமெரிக்க  ஆதரவு பெற்ற சிரியா ஜனநாயகப் படைகள் கூறி உள்ளன.

Next Story