அமெரிக்காவில் புதிய கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிப்பு


அமெரிக்காவில் புதிய கொரோனா பாதிப்பு  இரண்டு மடங்காக அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 July 2021 11:16 AM GMT (Updated: 15 July 2021 11:16 AM GMT)

அமெரிக்காவில் புதிய கொரோனா பாதிப்பு கடந்த 3 வாரங்களாக, நாள்தோறும் இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறது.

வாஷிங்டன்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

 தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18.91 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 18,91,35,007 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,27,74,956 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்து 74 ஆயிரத்து 032 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,22,86,019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79,152 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது, கடந்த 3 வாரங்களாக, நாள்தோறும் புதிய பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்து  வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்டா வகை உருமாறிய கொரோனா தொற்றுப் பரவல், தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டிருக்கும் மெத்தனம், ஜூலை 4ம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிகப்பெரிய கூட்டம் போன்றவை, இதற்குக் காரணங்களாக அமைந்துவிட்டன.

கடந்த ஜூன் 23 ம் தேதி நாள்தோறும் கொரோனா பாதிப்பு 11,300 ஆக இருந்த நிலையில், அதுவே கடந்த திங்கள்கிழமை 23,600 ஆக உயர்ந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் தற்போது 55.6 சதவீத மக்கள் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியையாவது செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதில், டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Next Story