அமெரிக்காவில் தொடர் துப்பாக்கி‌ சூடு; 4 பேர் பலி


அமெரிக்காவில் தொடர் துப்பாக்கி‌ சூடு; 4 பேர் பலி
x
தினத்தந்தி 19 July 2021 3:02 AM GMT (Updated: 19 July 2021 3:02 AM GMT)

அமெரிக்காவில் நடந்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களில் 4 பேர் பலியாகினர். 19 பேர் படுகாயமடைந்தனர்.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனாலும் அரசு தரப்பில் இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தலைநகர் வாஷிங்டன் உள்பட 3 மாகாணங்களில் அடுத்தடுத்து அரங்கேறிய தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அந்த நாட்டை அதிர வைத்தன.

தலைநகர் வாஷிங்டனில் உள்ள பேஸ்பால் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு இரு தேசிய அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதைக்காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.‌

போட்டி நடந்து கொண்டிருந்தபோது ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.‌ போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியே ஓடினர்.

ஆனாலும் அந்த மர்மநபர் தொடர்ந்து தன் கண்ணில்பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடுக்கான பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் துப்பாக்கி‌ சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்னதாக ஒரேகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகரில் நேற்று முன்தினம் காலை சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 4 துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறின.‌ இதில் ஒரு பெண் உட்பட 2 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சேக்ரமெண்டோ நகரில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூட்டுக்கு வழிவகுத்தது. இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டு கொண்டனர்.

இதில் 6 பேரின் உடல்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்‌. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story