கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஹைதி அதிபரின் இறுதி சடங்கில் துப்பாக்கிச்சூடு


கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஹைதி அதிபரின் இறுதி சடங்கில் துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 24 July 2021 10:58 PM GMT (Updated: 24 July 2021 10:58 PM GMT)

கரீபியன் தீவு நாடான ஹைதியின் அதிபர் ஜோவனல் மோயிஸ்‌ (வயது 53) கடந்த 7-ந்தேதி வெளிநாட்டு கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தில் அதிபர் ஜோவனல் மோயிஸ் மனைவி மார்ட்டின் மோயிஸ் படுகாயம் அடைந்தார்.

அவர் அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று அண்மையில் ஹைதி திரும்பினார். இந்தநிலையில் கூலிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அதிபர் ஜோவனல் மோயிசின் இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அதிபரின் மனைவி மார்ட்டின் மோயிஸ் தனது 3 பிள்ளைகளுடன் கலந்து கொண்டார். இதேபோல் அமெரிக்க அரசின் சார்பில் உயர்மட்ட பிரதிநிதிகள் பலர் இந்த இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டனர். இதனிடையே அதிபரின் படுகொலையில் ஹைதி அரசின் மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி இறுதி சடங்கு நடந்த இடத்துக்கு 
வெளியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிபர் ஜோவனல் மோயிசின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யும் இடத்துக்கு எடுத்து வரப்பட்டது. அப்போது அங்கு திடீரென கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. இதையடுத்து அமெரிக்க அரசு அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.

எனினும் சிறிது நேரத்துக்கு பிறகு போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் அதிபர் ஜோவனல் மோயிஸ்‌ உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Next Story