பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி..


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி..
x
தினத்தந்தி 26 July 2021 8:29 PM GMT (Updated: 26 July 2021 8:31 PM GMT)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி பெற்றது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. கடுமையான வன்முறைகள் மற்றும் மோசடி புகார்களுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலின் போது நடந்த வன்முறையில் 2 பேர் பலியாகினர். போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 23 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 

இந்த கட்சி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 10 இடங்களை கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தது. அதேசமயம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

Next Story