அலாஸ்காவில் தொடரும் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
அமெரிக்காவின் அலாஸ்காவில் ரிக்டரில் 5.5 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
அலாஸ்கா,
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சிக்னிக் என்ற நகரில் இருந்து தென்கிழக்கே 146 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 8.32 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 5.5 அளவில் பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 44.9 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்காவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. அலாஸ்காவின் பெர்ரிவில்லே என்ற பகுதிக்கு 91 கி.மீ. தென்கிழக்கே நேற்று முன்தினம் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 8.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கன் தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கையையும் விடுத்திருந்தது.
இதனால், கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். எனினும், இதனால் பெரிய அளவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
பசிபிக் ரிங் ஆஃப் பயர் பகுதியில் அமைந்துள்ளதால் அலாஸ்காவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. எனினும், அடுத்தடுத்த நாட்களில் அலாஸ்காவில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story