பெகாசஸ் மென்பொருளால் பிரபலங்களை உளவுபார்த்த விவகாரம்; இஸ்ரேல் விசாரணையை தொடங்கியது


பெகாசஸ் மென்பொருளால் பிரபலங்களை உளவுபார்த்த விவகாரம்; இஸ்ரேல் விசாரணையை தொடங்கியது
x
தினத்தந்தி 31 July 2021 1:59 AM GMT (Updated: 31 July 2021 1:59 AM GMT)

பெகாசஸ் மென்பொருளால் பிரபலங்களின் செல்போன்களை ஊடுருவி உளவு பார்த்ததாக எழுந்துள்ள புகார்கள் குறித்து இஸ்ரேல் விசாரணையை தொடங்கி உள்ளது.

உளவு விவகாரம்
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமம் உருவாக்கியுள்ள பெகாசஸ் என்ற உளவு மென்பொருள், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், மனித உரிமை போராளிகளை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளன. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட பல பிரபலங்களின் செல்போன்களை பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஊடுருவி உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பிரபலங்களின் தூக்கம் கெட்டது. அவர்களில் பலரும் செல்போன்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து புயலைக்கிளப்பி வருகிறது.

இஸ்ரேல் விசாரணை
பெகாசஸ் உளவுvt மென்பொருளைக்கொண்டு பல நாடுகளிலும் முக்கிய பிரபலங்கள் உள்ளிட்ட சிவில் சமூகத்தினர் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து என்.எஸ்.ஓ. குழுமம் மீது இஸ்ரேல் விசாரணையை தொடங்கியது.இஸ்ரேல் அரசு அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்த குழுமத்தின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதை இஸ்ரேல் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். அதே நேரத்தில் இது குறித்த கூடுதலான தகவல்களைத் தர அவர் மறுத்து விட்டார்.

அதிகாரங்களுக்கு உட்பட்டு செயல்பட்டதா?
இதுபற்றி அவர் கூறும்போது, “தற்சமயம் இதை நாங்கள் விவரிக்க இயலாது. ராணுவ அமைச்சகத்தின் ஏற்றுமதி கட்டுப்பாடு பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் அதிகாரிகள் என்.எஸ்.ஓ. குழும அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்” என குறிப்பிட்டார். இந்த விசாரணையின் முக்கிய அம்சம், ராணுவ அமைச்சகத்தின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பிரிவு அளித்துள்ள அனுமதிகள், அதிகாரங்களுக்கு உட்பட்டு என்.எஸ்.ஓ. குழுமம் செயல்பட்டதா என்பதுதான்.

மந்திரி உறுதி
பாரீஸ் சென்றுள்ள இஸ்ரேல் ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், பிரான்ஸ் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லியிடம் இது தொடர்பாக கூறும்போது, “என்.எஸ்.ஓ. குழுமம் மீது எழுந்துள்ள புகார்களை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும்” என உறுதி அளித்தார். குற்றங்களை, பயங்கரவாத செயல்களை எதிர்த்து போராடுவதற்காகத்தான் அரசு நிறுவனங்களுக்கு, சட்டப்பூர்வ பயன்பாடுகளுக்கு சைபர் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது என இஸ்ரேல் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story