9 சீனர்கள் உள்பட 13 பேர் பலியான தற்கொலைப்படை தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியா - பாகிஸ்தான் குற்றச்சாட்டு


9 சீனர்கள் உள்பட 13 பேர்  பலியான தற்கொலைப்படை தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியா - பாகிஸ்தான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Aug 2021 3:12 AM GMT (Updated: 13 Aug 2021 3:12 AM GMT)

பேருந்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா முகமது குரேஷி தெரிவித்தார்.


பாகிஸ்தானின் பகதுன்க்வா  மாகாணத்தில் புதிதாக தாசு தாம் என்ற அணைக்கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் ஈடுபட்டு வரும் சீன பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு கடந்த 14ம் தேதி பேருந்து சென்றபோது, திடீரென குண்டு வெடித்து பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 சீன பொறியாளர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

வெடிகுண்டு தாக்குதல் காரணமாக, பேருந்து விபத்து ஏற்பட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. விபத்தை அடுத்து, சீன விசாரணை அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு விரைந்து வந்து, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்தினா்.

விசாரணை முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா முகமது குரேஷி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “  பேருந்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பும் ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகமும் (என்டிஎஸ்) உள்ளன. அந்த இரு அமைப்புகளுக்கு இடையே ரகசியத் தொடா்பு உள்ளது” என்றார். 


Next Story