ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்காக அமெரிக்க படைகள் செல்லவில்லை- ஜோ பைடன் விளக்கம்


ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்காக அமெரிக்க படைகள் செல்லவில்லை- ஜோ பைடன் விளக்கம்
x
தினத்தந்தி 17 Aug 2021 3:06 AM GMT (Updated: 17 Aug 2021 3:06 AM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்,  “2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் காரணமாக பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காகவே அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் சென்றது. 

ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்காக அங்கு செல்லவில்லை.  அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு உள்ளதால், அமெரிக்க ராணுவம் வெளியேற முடிவு செய்தது. அமெரிக்க ராணுவம் வெளியேறுவதற்கு இதை விட உகந்த சூழல் இருக்காது.

தலிபான்களை ஒடுக்க ஆப்கன் ராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்தது. ஆனால் ஆப்கன் ராணுவத்தினர் போராடாமலேயே சரணடைந்து விட்டது. ஆப்கன் அரசியல் தலைவர்களிடம் ஒற்றுமை இன்மையே தலிபான்களின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஆப்கன் அரசியல்வாதிகள் நாட்டை கைவிட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். ஆப்கன் ராணுவமே போராட தயாராக இல்லாத சூழலில், அமெரிக்க வீரர்களை போரில் இழப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

ஆப்கனில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருக்கிறோம்.  எதிர்பார்த்த‌தை விட தலிபான்கள் வேகமாக ஆப்கனை கைப்பற்றி விட்டனர்.  காபூலில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கனில் உள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள அமெரிக்கர்களை தாக்கினால் தலீபான்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆப்கன் மக்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடரும்” என்றார். 


Next Story