ஹமாஸ் ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்


ஹமாஸ் ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்
x
தினத்தந்தி 24 Aug 2021 4:08 AM GMT (Updated: 24 Aug 2021 4:08 AM GMT)

ஹமாஸ் அமைப்பின் ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை வான்வெளி தாக்குதல் நடத்தியது.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் அமைப்பினரின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது. 

இதற்கிடையில், காசா முனையில் இருந்து எரி வாயு நிரப்பப்பட்ட தீப்பற்றி எரியக்கூடிய பலூன்களை இஸ்ரேலின் வடக்குப்பகுதியை குறிவைத்து பாலஸ்தீனர்கள் நேற்று ஏவினர். பாலஸ்தீனர்களால் பறக்கவிடப்பட்ட பலூன்கள் இஸ்ரேலின் வனப்பகுதியில் விழுந்து அங்கு காட்டுத்தீ பரவ வழிவகுக்கிறது. இந்த தாக்குதல் பாலஸ்தீனர்களின் வழக்கமான தாக்குதல் முறைகளில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட எரிவாயு நிரப்பப்பட்ட பலூன் தாக்குதலுக்கு இஸ்ரேல் விமானப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். 

காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் ஆயுத தயாரிப்பு மையங்கள், ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில், ஹமாஸ் அமைப்பின் ஆயுத தயாரிப்பை மையங்கள் அழிக்கப்பட்டன. ஆனால், இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதேனும் எற்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 

Next Story