தலீபான்களிடம் பணிந்தது ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்புபடை!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Sep 2021 2:41 AM GMT (Updated: 6 Sep 2021 2:41 AM GMT)

பஞ்ச்ஷிர் மாகாணத்தில் போர் நிறுத்தத்தை ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படையினர் அறிவித்துள்ளனர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தலீபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேற தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே தலீபான் பயங்கரவாதிகள் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசம் ஆக்கினார்.

கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தலீபான்கள் தங்களது தலைமையில் நாட்டில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.

தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தலீபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலீபான்கள் கைப்பற்றிய போதும் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்து வந்தது.  

இதனிடையே ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளிகள் தலீபான்களுடன் சண்டையிட்டு வந்தனர். தற்போது பஞ்ச்ஷீர் மாகாணத்தின் தலைநகரை சுற்றியுள்ள மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாகவும் மாகாண தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாக தலீபான்கள் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் பஞ்ச்ஷீர் மாகாணத்தை விட்டு வெளியேறினால் தலீபான்களுடம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எதிர்ப்புக்குழுவின் தலைவர் அகமது மசூத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் போர் நிறுத்தத்தத்தை ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படையினர் அறிவித்துள்ளனர். தலீபான்களின் தாக்குதல் காரணமாக பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தலீபான்கள் பஞ்ச்ஷிரில் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். அதன் படைகளை திரும்பப் பெற வேண்டும். பதிலுக்கு, நாங்கள் எங்கள் படைகளை இராணுவ நடவடிக்கையில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story