“முழுமையாக கைப்பற்றப்பட்டது பஞ்ச்ஷீர் மாகாணம்” - தலீபான்கள் அறிவிப்பு!


“முழுமையாக கைப்பற்றப்பட்டது பஞ்ச்ஷீர் மாகாணம்” - தலீபான்கள் அறிவிப்பு!
x
தினத்தந்தி 6 Sep 2021 5:25 AM GMT (Updated: 6 Sep 2021 5:25 AM GMT)

போர் நிறுத்தத்தை எதிர்ப்பு படையினர் அறிவித்திருந்தநிலையில், பஞ்ச்ஷீர் மாகாணம் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர்.

காபூல், 

கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தலீபான்கள் தங்களது தலைமையில் நாட்டில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.

தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தலீபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலீபான்கள் கைப்பற்றிய போதும் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்து வந்தது.  

இதனிடையே ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளிகள் தலீபான்களுடன் சண்டையிட்டு வந்தநிலையில், பஞ்ச்ஷீர் மாகாணத்தின் தலைநகரை சுற்றியுள்ள மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாகவும் மாகாண தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாக தலீபான்கள் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் பஞ்ச்ஷீர் மாகாணத்தை விட்டு வெளியேறினால் தலீபான்களுடம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எதிர்ப்புக்குழுவின் தலைவர் அகமது மசூத் தெரிவித்திருந்தார். 

தலீபான்களின் தாக்குதல் காரணமாக பெரும் இழப்பை சந்தித்துள்ளதால், பஞ்ச்ஷிர் மாகாணத்தில் போர் நிறுத்தத்தத்தை ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படையினர் இன்று காலை அறிவித்திருந்தனர்.  

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் எதிர்ப்புப் படையினரின் கடைசிப் பகுதியான பஞ்ச்ஷிர் மாகாணத்தை தலீபான்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியான புகைபடங்களில் தலீபான் உறுப்பினர்கள் பஞ்ச்ஷிர் மாகாண ஆளுநர் வளாகத்தின் வாயிலின் முன் நிற்பதை தெரிவிக்கின்றன.

ஆனால் தலீபான் படைகளை எதிர்க்கும் எதிர்க்கட்சி குழுவின் தலைவர் அகமது மசூதிடம் இருந்து, இந்த சம்பவம் தொடர்பான உடனடியாக எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

Next Story