உலகிலேயே முதல் முறையாக கியூபாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி


உலகிலேயே முதல் முறையாக கியூபாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 6 Sep 2021 11:26 PM GMT (Updated: 7 Sep 2021 12:02 AM GMT)

கியூபாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,230- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹவானா, 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகள் 12- வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடத்தொடங்கியுள்ளன.  

இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி கியூபாவில் தொடங்கியுள்ளது. அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12-வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு போடும் பணியை கியூபா தொடங்கியது. இந்த சூழலில், திங்கள் கிழமை முதல் 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது.  கியூபாவின் மத்திய மகாணமான சியன்பியூகோஸ் பகுதியில்  குழைந்தைகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளது. 

சீனா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசூலா ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தாலும், கியூபாவில் முதன் முறையாக போடப்பட்டுள்ளது. கியூபாவில் போடப்பட்டுள்ள தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  கியூபாவில் அக்டோபர், நவம்பரில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் அனைத்து சிறுவர்களுக்கும்  தடுப்பூசி போட்ட பின்னரே பள்ளிகள் திறக்கும் என்றும் கியூபா அரசு அறிவித்துள்ளது.

Next Story