தலீபான்களின் முன் துப்பாக்கியை கண்டு பயம் இல்லாமல் எதிர்த்து நிற்கும் பெண்கள்


தலீபான்களின் முன் துப்பாக்கியை கண்டு பயம் இல்லாமல் எதிர்த்து நிற்கும்  பெண்கள்
x
தினத்தந்தி 8 Sep 2021 12:31 PM GMT (Updated: 8 Sep 2021 12:31 PM GMT)

தலீபான்களுக்கு உள்ளேயே கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளது. தலீபான் படைகள் இப்படி மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் இந்த தலையீட்டிற்கு எதிராக அங்கு மக்கள் போராடி வருகிறார்கள்.

காபூல்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தலீபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.

இந்த புதிய அரசில் தலீபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் தலீபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இரு தரப்புக்கும் இடையிலான இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது காபூலுக்கு விரைந்தார்.

தலீபான்கள் குழுவில் இருக்கும் தீவிரமான பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு உயர் பதவிகளை பெற்றுத்தர பாகிஸ்தான் முயன்று வருகிறது. முல்லா கனி பரதர், ஆனஸ் ஹக்கானி இரண்டு பேருமே பாகிஸ்தான் ஆதரவாளர்கள்தான். ஆனாலும் ஹக்கானி தீவிரமான பாகிஸ்தான் அனுதாபி என்பதால் அவரை அதிபராக்க பாகிஸ்தான் விரும்புகிறது. இதை பரதர் குழு விரும்பவில்லை என்பதால்தான் அங்கு அதிபரை  தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தலீபான்களுக்கு உள்ளேயே கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளது. தலீபான் படைகள் இப்படி மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் இந்த தலையீட்டிற்கு எதிராக அங்கு மக்கள் போராடி வருகிறார்கள். 

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் மூக்கை நுழைக்க கூடாது என்று கூறி காபூலில் மக்கள் போராடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் மக்கள் எப்போதும் வெளிநாட்டு ஆதிக்கத்தை விரும்ப மாட்டார்கள் என்பதே வரலாறு. இப்படி இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் அதிகாரம் செலுத்த நினைப்பதும், தங்களுக்கு விருப்பமான நபர்களை ஆட்சிக்கு கொண்டு வர நினைப்பதையும் ஆப்கான் மக்கள் விரும்பவில்லை.

காபூலில் குவிக்கப்பட்டு இருக்கும் தலீபான்கள் படைகள் போராட்டக்காரர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில் வானத்தை நோக்கியும், போராட்டக்காரர்களை நோக்கியும் தலீபான்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா, யாராவது பலியானார்களா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அங்கு தொடர்ந்து தலீபான் துப்பாக்கி சூடு நடத்தி வருவதால் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் அச்சமின்றி  பெண்கள் தலீபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.  தங்கள் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிலைநிறுத்த போராடுகிறார்கள்.. அவர்கள் ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் தலீபான்களுக்கு நெருக்கடியை கொடுக்கிறார்கள். அதனை  சித்தரிக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.காபூலில் பெண்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இன்று, அவர்களின் போராட்டம் காபூல் நகரின் மேற்கில் உள்ள தஷ்த் இ பர்ச்சில்  தொடங்கியது. "பெண்கள் இல்லாத மந்திசபை  தோல்வியடையும்" என்று பெண்கள் கோஷமிட்டனர்.

வடக்கு பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததாக குற்றம் சாட்டி பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க தலீபான்கள்  வானில் துப்பாக்கிச்சூடு நடத்தினர், ஆனால் போராட்டக்காரர்கள்  மேலும் கோபம் அடைந்தனர்.

நேற்று காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே பல ஆப்கானியர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தலீபான் படையைச் சேர்ந்த ஒருவர் ஹிஜாப் அணிந்த பெண் போராட்டக்காரரை நோக்கி துப்பாக்கியைக் காட்டிய காட்சி ஒன்று காபூலின் தெருக்களில் செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்டது.

ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இஅந்த் புகைப்படம்  ஆப்கானிஸ்தானில் பெண்களின் மன உறுதியை காட்டுகிறது.


Next Story