மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் 10 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு


மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் 10 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு
x
தினத்தந்தி 8 Sep 2021 8:07 PM GMT (Updated: 8 Sep 2021 8:07 PM GMT)

மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குரேரோ மாகாணத்தின் அகாபுல்கோ நகரில் நேற்று முன்தினம் மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குரேரோ மாகாணத்தின் அகாபுல்கோ நகரில் நேற்று முன்தினம் மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் அகாபுல்கோ நகரம் மட்டும் இன்றி தலைநகர் மெக்சிகோ சிட்டி உள்பட அதனை சுற்றியுள்ள பல நகரங்களும் கடுமையாக குலுங்கியது.இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு அலறியடித்தபடி வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் அகாபுல்கோ மற்றும் அதன் அருகே உள்ள பல நகரங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. அகாபுல்கோ நகரில் தேவாலயம் ஒன்று முற்றிலுமாக இடிந்து விழுந்தது. மேலும் பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. குரேரோ மாகாணத்தின் கொயுகா டி பெனிடெசிஸ் நகரில் நிலநடுக்கத்தின் போது மின் கம்பம் சரிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே நிலநடுக்கம் காரணமாக அகாபுல்கோ, மெக்சிகோ சிட்டி, மோரேலோஸ், ஓக்சாகா ஆகிய நகரங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

மின் இணைப்பை மீண்டும் கொண்டுவரும் பணியில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story