போராட ,விளையாட ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலீபான்கள் தடை


போராட ,விளையாட ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலீபான்கள் தடை
x
தினத்தந்தி 9 Sep 2021 1:17 PM GMT (Updated: 9 Sep 2021 1:17 PM GMT)

ஆப்கானிஸ்தானில்பெண்கள் உரிமை கோரி நடத்தி வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தலீபான்கள் தடைவிதித்து உள்ளனர்


காபூல்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தலீபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.

இந்த புதிய அரசில் தலீபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் தலீபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இரு தரப்புக்கும் இடையிலான இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது காபூலுக்கு விரைந்தார்.

தலீபான்கள் குழுவில் இருக்கும் தீவிரமான பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு உயர் பதவிகளை பெற்றுத்தர பாகிஸ்தான் முயன்று வருகிறது. முல்லா கனி பரதர், ஆனஸ் ஹக்கானி இரண்டு பேருமே பாகிஸ்தான் ஆதரவாளர்கள்தான். ஆனாலும் ஹக்கானி தீவிரமான பாகிஸ்தான் அனுதாபி என்பதால் அவரை அதிபராக்க பாகிஸ்தான் விரும்புகிறது. இதை பரதர் குழு விரும்பவில்லை என்பதால்தான் அங்கு அதிபரை  தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தலீபான்களுக்கு உள்ளேயே கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளது. தலீபான் படைகள் இப்படி மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் இந்த தலையீட்டிற்கு எதிராக அங்கு மக்கள் போராடி வருகிறார்கள். 

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் மூக்கை நுழைக்க கூடாது என்று கூறி காபூலில் மக்கள் போராடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் மக்கள் எப்போதும் வெளிநாட்டு ஆதிக்கத்தை விரும்ப மாட்டார்கள் என்பதே வரலாறு. இப்படி இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் அதிகாரம் செலுத்த நினைப்பதும், தங்களுக்கு விருப்பமான நபர்களை ஆட்சிக்கு கொண்டு வர நினைப்பதையும் ஆப்கானிஸ்தான் மக்கள் விரும்பவில்லை.

ஆப்கானிஸ்தானில் அச்சமின்றி  பெண்கள் தலீபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.  தங்கள் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிலைநிறுத்த போராடுகிறார்கள்.. அவர்கள் ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் தலீபான்களுக்கு நெருக்கடியை கொடுக்கிறார்கள். அதனை  சித்தரிக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.காபூலில் பெண்கள் தொடர்ந்து 5வது  நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமை கோரி நடத்தி வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தலீபான்கள் தடைவிதித்து உள்ளனர்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவித்துள்ளனர். அதோடு எழுப்பப்படும் முழக்கங்கள், ஏந்திச்செல்லும் பதாகைகளுக்கும் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தலீபான்கள் அரசு அறிவித்துள்ளது.

அதுபோல் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான்  பெண்கள் பங்கேற்க தலீபான்கள் தடை விதித்து உள்ளனர்.

ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த தலிப்பான்  அரசின் கலாச்சார ஆணையத் துணை தலைவர் அகமதுல்லா வாசிக், கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெண்களை கிரிக்கெட் விளையாட அனுமதித்தால் இஸ்லாமிய சட்டத்தின் ஆடை கட்டுப்பாடுகளை அவர்கள் மீறுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது ஊடக யுகம் என்பதால் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தவிர்க்க முடியாதவை. அவற்றை மக்கள் பார்க்கிறார்கள். இஸ்லாமும் இஸ்லாமிய எமிரேட்டும் பெண்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கவில்லை. 
பெண்கள் உடல் வடிவத்தை வெளிப்படுத்தும் வகையிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை இஸ்லாமிய சட்டம் அனுமதிக்காது. இதனிடையே தலீபான் ஆட்சியாளர்கள் பெண்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்காவிட்டால் ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணிக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story