வடக்கு மாசிடோனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து


வடக்கு மாசிடோனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 9 Sep 2021 6:07 PM GMT (Updated: 9 Sep 2021 6:07 PM GMT)

வடக்கு மாசிடோனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து 14 பேர் பலி.

ஸ்கோப்ஜே,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் டெட்டோவோ நகரத்தின் பிரதான சாலையில் தற்காலிகமாக ஒரு கொரோனா ஆஸ்பத்திரி கடந்த ஆண்டு அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்த ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவத்தொடங்கியது. இதை கண்டு அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் அலறினர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த கோரத்தீ விபத்தில் 14 பேர் உடல்கருகி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்து குறித்து அந்த நாட்டின் சுகாதார மந்திரி வெங்கோ பிலிப்ஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த நாள் மிகவும் சோகமான நாள். பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் மீட்கப்பட்டு தலைநகர் ஸ்கோப்ஜேயில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்து, பயங்கரமான விபத்து” என குறிப்பிட்டுள்ளார்.

டெட்டோவோ நகர துணைத்தலைமை தீயணைப்பு அதிகாரி சாசோ டிராஜ்சேவ்ஸ்கி கூறும்போது, “ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால்தான் தீ கட்டிடத்துக்குள் மிக வேகமாக பரவியது” என குறிப்பிட்டார்.

இந்த தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து தெரியவரவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Next Story