இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் 4 பேர் பிடிபட்டனர்...


இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் 4 பேர் பிடிபட்டனர்...
x
தினத்தந்தி 13 Sep 2021 6:32 AM GMT (Updated: 13 Sep 2021 6:32 AM GMT)

சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் 4 பேரை மீண்டும் பிடித்துவிட்டதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜெருசலேம், 

இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக சுரங்கம் தோண்டி தப்பிச்சென்றனர். கடந்த 6-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடியவர்களில் சிலர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தப்பியோடிய பாலஸ்தீன கைதிகள் மேற்கு கரையில் அமைந்துள்ள ஜெனின் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என தகவல் வெளியாகின. அந்த பகுதியில் உள்ள முகாம்களில் கைதிகளின் உறவினர்கள் வசித்து வருவதால் அவர்களை சந்திக்க சிறையில் இருந்து தப்பிய கைதிகள் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகின.

இதையடுத்து, சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது. தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் இஸ்ரேல் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கில்போவா சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய 6 பாலஸ்தீன கைதிகளில் 4 பேரை பிடித்துவிட்டதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட 4 பேரில் 2 பேர் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள உம் அல்-ஹனம் என்ற கிராமத்தில் பதுங்கி இருந்ததாகவும், எஞ்சிய இருவர் இஸ்ரேலின் நாசரேத் நகரில் பதுங்கி இருந்ததாகவும் இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தப்பியோடியவர்களில் எஞ்சிய 2 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில், தப்பியோடிய கைதிகளுக்கு ஆதரவாக காசா முனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலஸ்தீனர்கள் நடத்திய பேரணியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் பலர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story