தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம்


தலீபான்கள் ஆட்சியில்  ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம்
x
தினத்தந்தி 13 Sep 2021 6:44 AM GMT (Updated: 13 Sep 2021 6:44 AM GMT)

தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன.

காபூல்,

ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான நேரடி விமான போக்குவரத்தை உடனடியாக நிறுத்தின.

தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலுக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனினும்,வெறும் 10 பயணிகள் மட்டுமே அதில் இருந்தனர்.  பயணிகளை விட விமான பணியாளர்கள் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. 

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வர்த்தக விமான சேவை தொடங்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ வார இறுதியில் வழக்கமான வர்த்தக விமான சேவைகளை தொடங்க  நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால், எத்தனை விமானங்கள் இரு நாட்டு தலைநகரங்களுக்கும் இடையேயும் இயக்கப்படும் என்பதை இப்போதே கூற முடியாது” என்றார்.  முன்னதாக கடந்த 4-ந் தேதி ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story