துபாயில் ‘வீடெக்ஸ்’ சோலார் கண்காட்சி


துபாயில் ‘வீடெக்ஸ்’ சோலார் கண்காட்சி
x
தினத்தந்தி 13 Sep 2021 9:48 PM GMT (Updated: 13 Sep 2021 9:48 PM GMT)

55 நாடுகளின், 1,200 நிறுவனங்கள் பங்கேற்கும் ‘வீடெக்ஸ்’ சோலார் கண்காட்சி துபாயில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி நடக்கிறது.

‘வீடெக்ஸ்’ சோலார் கண்காட்சி
‘வீடெக்ஸ்’ சோலார் கண்காட்சி குறித்த அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி நேற்று துபாயில் நடந்தது. இதில் அந்த ஆணையத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சயீத் முகம்மது அல் தயார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தின் சார்பில் 23-வது முறையாக நடத்தப்படும் கண்காட்சியான ‘வீடெக்ஸ்’ சோலார் கண்காட்சி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த கண்காட்சி நடைபெற துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் 29 ஆயிரத்து 200 சதுர மீட்டர் பரப்பளவில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.துபாயில் ஆண்டுதோறும் நடைபெறும் சூரியஒளி மாற்று எரிசக்தி விழிப்புணர்வு கண்காட்சி இதுவாகும். இந்த கண்காட்சியில் நடப்பு ஆண்டில் மொத்தம் 55 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த நாடுகளில் உள்ள 1,200 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு அந்த நிறுவனங்கள் தயாரித்துள்ள சூரிய ஒளியில் இயங்கும் பொருட்கள் மற்றும் மாற்று எரிசக்திக்கான தொழில்நுட்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

3 நாட்கள்
இதில் கூடுதலாக தேசிய அளவில் அமீரக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அரசுத்துறைகள் கலந்து கொள்கின்றன. கண்காட்சி அரங்கில் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சார திட்டங்களை விளக்கும் வகையில் மாதிரிகள் வைக்கப்பட உள்ளது.இந்த மாதிரிகளில் துபாய் நகரைப்போல உருவாக்கப்பட்டுள்ள சிறிய நகரில் எதிர்கால மின்சார திட்டங்கள் குறித்து புரிந்து கொள்ளும் வகையில் அது அமைக்கப்பட உள்ளது. இதில் முக்கியமாக வருகிற 50 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மற்றும் 2050-ம் ஆண்டுக்குள் 75 சதவீதம் தூய எரிசக்தி மூலம் மின்சாரம் பெறுவது ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் சிறப்பு அம்சமாக சர்வதேச அளவில் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையம் எவ்வாறு காலநிலை மாறுபாடு, உலக வெப்பமயமாதல், பசுமை தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கும் எரிசக்தி, தன்ணீர் பாதுகாப்பு மற்றும் மாற்று எரிசக்தியில் அனைத்து நாடுகளுடனான ஒத்துழைப்பை விளக்கும் வகையில் காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளது. வருகிற அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் இந்த கண்காட்சியானது 7-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அவருடன் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கலந்து கொண்டனர்.

Next Story