மியான்மர்: ஆங்சான் சூகிக்கு ஊழல் வழக்குகளில் 60 ஆண்டு சிறை கிடைக்க வாய்ப்பு


image courtesy: Franck Robichon/Pool via Reuters
x
image courtesy: Franck Robichon/Pool via Reuters
தினத்தந்தி 18 Sep 2021 7:04 AM GMT (Updated: 18 Sep 2021 7:04 AM GMT)

மியான்மரில் மனித உரிமை போராளி என்று அறியப்படும் பெண் தலைவர் ஆங்சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் மீது அக்டோபர் 1ம் தேதி மியான்மர் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது.

மியான்மர்: 

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் பெருவாரியாக வென்று ஆட்சியை பிடித்த ஆங்சான் சூகி கட்சியின் அரசை பிப்ரவரி மாதம் 1ம் தேதி அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்தது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.  ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 900-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், அமைதியான வழியில் போராடும் அப்பாவி மக்கள் மீது வன்முறையை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் மியான்மர் ராணுவத்துக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் முறைகேடு நடத்தி தேர்தலில் வென்றதாக குற்றம்சாட்டிய ராணுவம், ஆட்சியை பிடித்த  ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவரான ஆங்சான் சூகி உள்ளிட்ட பலரை வீட்டு காவலில் அடைத்தது.  

எம்.பி.க்கள், கட்சி பிரதிநிதிகள் இன்றும் சிறையிலேயே உள்ளனர். இந்த நிலையில் தேர்தலின் போது சட்டவிரோதமாக வாக்கி டாக்கி வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு, தேசத்துரோக வழக்கு,  ரகசிய சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கு மற்றும் சட்டவிரோதமாக தங்கம் பெற்றதாக வழக்கு என பல வழக்குகள்  ஆங்சான் சூகி மீது தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என்று ஆங்சான் சூகியின் வழக்கறிஞர் கின் மவுன்ஸா கூறியுள்ளார்.

4 வழக்குகளிலும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் தலா 15 ஆண்டுகள் என மொத்தம் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

மியான்மரில் மக்கள் விடுதலைக்காக ஆங்சான் சூகி ஏற்கனவே 21 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர் ஆவார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான 76 வயதான ஆங்சாங் சுகிக்கு இந்த ஊழல் வழக்குகளில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.

Next Story