ரஷிய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; 8 பேர் பலி


ரஷிய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; 8 பேர் பலி
x
தினத்தந்தி 20 Sep 2021 4:28 PM GMT (Updated: 20 Sep 2021 4:28 PM GMT)

ரஷியாவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவரை போலீசாரை கைது செய்தனர்.

மாஸ்கோ,

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு
ரஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெர்ம் நகரில் உள்ளது பெர்ம் பல்கலைக்கழகம். இங்கு நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த பல்கலைக்கழகம் காலை வழக்கம் போல் இயங்க தொடங்கியது. பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்த, மாணவ-மாணவிகள் அதனை கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.

ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்தனர்
அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர் ஒருவர் சக மாணவர்கள் மற்றும் பேராசிரிரியர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதை கண்டு பதறிப்போன மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.சில மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் சென்று, கதவுகளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். இன்னும் சிலர் வகுப்பறைகளில் உள்ள ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்து தப்பி ஓடினர்.

சம்பவ இடத்திலேயே 8 பேர் பலி
ஆனாலும் அந்த மாணவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளினார். இதில் சுமார் 20 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது
இதற்கிடையில் இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்ததுக்கு விரைந்து சென்ற போலீசார் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மாணவரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடாத போலீசார் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story