பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்


பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
x
தினத்தந்தி 28 Sep 2021 9:06 AM GMT (Updated: 28 Sep 2021 9:06 AM GMT)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்டார்.

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பின்னர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

அங்கு பைசர், மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. பொதுவாக கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் 2 டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. இருப்பினும் வைரஸ் உருமாற்றம் அடைவதன் காரணத்தால், கூடுதல் பாதுகாப்பிற்காக 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்துவதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம், அந்நாட்டில் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களும் பூஸ்டர் டோஸ் தடுப்புசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து பலருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்டார். 78 வயதான ஜோ பைடன் தடுப்பூசியின் முதல் டோசை கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியும், 2-வது டோசை ஜனவரி 11-ம் தேதியும் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story