ஆப்கானிஸ்தான்: ஐ.எஸ். பயங்கரவாதிகளை கைது செய்த தலீபான்கள்...!


ஆப்கானிஸ்தான்: ஐ.எஸ். பயங்கரவாதிகளை கைது செய்த தலீபான்கள்...!
x
தினத்தந்தி 7 Oct 2021 5:27 AM GMT (Updated: 7 Oct 2021 5:59 AM GMT)

ஆப்கானிஸ்தானில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகளை தலீபான்கள் கைது செய்துள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலீபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். அமைப்பு பொதுமக்கள் மற்றும் தலீபான்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், தலீபான்களுக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலீபான்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தலீபான்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தலீபான்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் தலீபான்கள் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தலீபான்கள் செய்தித்தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அந்நாட்டின் நஹாங்கர் மாகாணம் ஜலாலாபாத் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தலீபான்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தலீபான்கள் உயிரிழந்தனர். மேலும், பொதுமக்களில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Next Story