நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 187 பேர் மீட்பு


நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 187 பேர் மீட்பு
x
தினத்தந்தி 8 Oct 2021 5:37 PM GMT (Updated: 8 Oct 2021 5:37 PM GMT)

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களை கடத்தி அவர்களை பிணைக்கைதிகளாக வைத்து கொண்டு அரசை மிரட்டி தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெண்கள், சிறுவர்கள் உள்பட 180-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.

அவர்களை பத்திரமாக மீட்க பயங்கரவாதிகளுடன் மாநில அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனாலும் பயங்கரவாதிகள் அவர்களை விடுவிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அப்பாவி மக்கள் சிபிரி வனப்பகுதிக்குள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் 100-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் சிபிரி வனப்பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் மக்களை சிறைப்பிடித்து வைத்திருந்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதை தொடர்ந்து, பிணைக்கைதியாக இருந்த 187 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.


Next Story