அமெரிக்காவில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்


அமெரிக்காவில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2021 8:46 AM GMT (Updated: 10 Oct 2021 8:46 AM GMT)

அமெரிக்காவில் இதுவரை 18.7 கோடிக்கும் அதிகமானோர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 40,18,19,240 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதில் 21,68,89,814 பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 18,72,15,471 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தவிர குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக கண்டறியப்பட்டவர்களில் சுமார் 20 லட்சம் பேர் 3-வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story