இங்கிலாந்து இளவரசரின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி போட்டியில் தமிழக மாணவி பங்கேற்பு


இங்கிலாந்து இளவரசரின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி போட்டியில் தமிழக மாணவி பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Oct 2021 4:52 PM GMT (Updated: 10 Oct 2021 4:52 PM GMT)

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டியில் தமிழக மாணவி வினிஷா உமா சங்கரின் சோலார் இஸ்திரி வண்டி பங்கேற்கிறது.

ரூ.10 கோடி பரிசு
பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், அதற்கான சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குவோருக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய இந்த பரிசு, சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.10 கோடி) பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டிக்கு 15 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சீனா, வங்காளதேசம், நைஜீரியா, கோஸ்டாரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவில் இருந்து 15 பேர் கொண்ட இந்த இறுதி பட்டியலை இளவரசர் வில்லியம் கடந்த மாதம் வெளியிட்டார்.

சோலார் இஸ்திரி வண்டி

இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து இருவர் இடம்பிடித்து உள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த வினிஷா உமாசங்கர் (வயது 14) என்ற மாணவி முக்கியமானவர் ஆவார்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியான இவர், சோலார் மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கி உள்ளார். சுமார் 40 ஆயிரம் செலவில் உருவாக்கி உள்ள இந்த வண்டியால், கரியின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.இந்த வண்டியை உருவாக்கியதன் மூலம் வினிஷா உமாசங்கர் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏராளமான விருதுகளும், பரிசுகளும் பெற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக, புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டிக்கும் அவர் தேர்வாகி இருப்பது உலக அளவில் இந்தியா மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

டெல்லியை சேர்ந்தவரும் பங்கேற்பு

இதைப்போல டெல்லியை சேர்ந்த வித்யுத் மோகன் என்பவர் வேளாண் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் அமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளார். டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதால் தலைநகரில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில் வித்யுத் மோகனின் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. எனவே அவரது படைப்பும் சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி பட்டியலில் இடம்பெற்று உள்ளது.

17-ந் தேதி இறுதி போட்டி

இந்த இறுதி போட்டி லண்டனின் அலெக்சாண்டிரா மாளிகையில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் படைப்பாளிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வினிஷா உமாசங்கர் மற்றும் வித்யுத் மோகன் இருவரும் காணொலி மூலம் பங்கேற்கின்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் உயர்ந்த கவுரவமாக கருதப்படும் இந்த விருதை வெல்வதற்காக வினிஷா மற்றும் வித்யுத் ஆகியோருக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


Next Story