தெற்கு கலிபோர்னியாவில் விமான விபத்து; 2 பேர் பலி


தெற்கு கலிபோர்னியாவில் விமான விபத்து; 2 பேர் பலி
x
தினத்தந்தி 12 Oct 2021 2:04 AM GMT (Updated: 12 Oct 2021 2:07 AM GMT)

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட விமான விபத்தால், வீடுகள் தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

தெற்கு கலிபோர்னியா பகுதியில் (திங்கட்கிழமை) நேற்று ஒரு சிறிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் குறைந்தது இரண்டு பேர் பலியாகினர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர். மேலும், இரண்டு வீடுகள் மற்றும் ஒரு லாரி உட்பட பல வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

அந்த விமானம் சான் டியாகோ நகரின் வடகிழக்கில் சுமார் 20 மைல்கள் (30 கிலோமீட்டர்) புறநகர் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தீயணைப்பு படையின் துணை தலைமை அதிகாரி  கூறுகையில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விமானம் இரட்டை என்ஜின் கொண்ட செஸ்னா சி 340 ரக விமானம் ஆகும். விமானம் எங்கு  சென்றது என்பது குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.விபத்து நடந்த நகர்ப்பகுதியில் உள்ள சாண்டனா பள்ளியின் மிக அருகே இந்த விபத்து நடந்துள்ளது. எனினும், பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதாக பள்ளி நிர்வாகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விமான விபத்து குறித்து விசாரிக்கும் என்று முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story