லா பால்மா தீவில் ரிக்டர் 4.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


லா பால்மா தீவில் ரிக்டர் 4.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 14 Oct 2021 8:08 PM GMT (Updated: 14 Oct 2021 8:08 PM GMT)

எரிமலை வெடித்துள்ள லா பால்மா தீவில் இன்று ரிக்டர் 4.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் வடமேற்கு ஆப்பிரிக்க கடற்கரையையொட்டி அமைந்துள்ள கேனரி தீவுகளில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த தீவில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியது.

இந்த எரிமலையில் இருந்து கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 2-வது முறையாக லா பால்மா எரிமலை வெடித்துள்ளது. எரிமலை வெடிப்பிற்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டதால், அங்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 

இதுவரை 1,500-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 6 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து வெளியாகும் நெருப்புக் குழம்பு, அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்து வருகிறது. அங்கு ஆபத்தான வாயுக்கள் காற்றில் பரவ வாய்ப்புள்ளது என்பதால், அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பால் எழும்புகின்ற புகை மூட்டம் வானில் நீண்ட தூரம் வரை பரவியுள்ளது. எரிமலை சாம்பல் காரணமாக லா பால்மா விமான நிலையம் சில நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று லா பால்மா தீவுப்பகுதியில் ரிக்டர் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் எரிமலை வெடித்ததில் இருந்து தற்போது வரை அங்கு சுமார் 60 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இவற்றை விட அதிக சக்திவாய்ந்ததாக இருந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் இருந்து சுமார் 300 குடியிருப்பு வாசிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story