நார்வேயில் அம்புகளை எய்து 5 பேரை கொன்ற நபர் கைது
நார்வேயில் வில் அம்புகளால் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஓஸ்லோ,
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயின் தலைநகர் ஓஸ்லேவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள நகரம் காங்ஸ்பெர்க். கடந்த புதன் கிழமை இரவு இந்த நகரம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு வீதியில் வில் அம்புடன் வலம் வந்த நபர் ஒருவர் திடீரென மக்களை நோக்கி அம்புகளை எய்தார்.
இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த நபர் தொடர்ந்து மக்களை நோக்கி அம்புகளை எய்து கொண்டே இருந்தார். இதில் 8 பேரின் உடலில் அம்புகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
இதனிடையே இந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைதொடர்ந்து, இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 3 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனிடையே தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து சில மைல் தொலைவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய அந்த நபர் டென்மார்க்கை சேர்ந்த 37 வயதான எஸ்பென் ஆண்டர்சன் பிராதன் என்பது தெரியவந்துள்ளதாகவும் தாக்குதலுக்கான காரணம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story