எசக்ஸ் நகரில் எம்.பி குத்திக் கொலை;பயங்கரவாத செயல் என இங்கிலாந்து போலீஸ் தகவல்
தேவாலயத்துக்குள் புகுந்து எம்.பி. கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லண்டன்,
இங்கிலாந்தில் 38 ஆண்டுகளாக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.யாக இருந்து வந்தவர் சர் டேவிட் அமேஸ். 69 வயதான இவர் நேற்று தனது சொந்த தொகுதியான எசக்ஸ் நகரில் உள்ள தேவலாயத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது தொகுதி மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி கொண்டிருந்தார்.
அப்போது தேவலாயத்துக்குள் கத்தியுடன் நுழைந்த வாலிபர் ஒருவர் திடீரென சர் டேவிட் அமேசை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கத்தியால் குத்திய அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தேவாலயத்துக்குள் புகுந்து எம்.பி. கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில், எம்.பி கொலை செய்யப்பட்ட சம்பவம் பயங்கரவாத செயல் என்று அந்நாட்டு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பியை கொலை செய்த வாலிபர், சோமாலிய பாரம்பரியம் கொண்ட இங்கிலாந்து குடிமகன் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெள்யிட்டு வருகின்றன.
Related Tags :
Next Story