பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை


பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை
x
தினத்தந்தி 20 Oct 2021 12:05 PM GMT (Updated: 20 Oct 2021 12:05 PM GMT)

இதன் மூலம் இனங்களுக்கு இடையான இடைவெளி குறைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கலிபோர்னியா,

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் மனிதனுக்கு நெருங்கிய இனமான மனித வகைக் குரங்குகளிடம் இருந்து உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். பல கட்ட முன்னேற்றத்தைப் பெற்றுள்ள இந்த ஆராய்ச்சி தற்போது மிகப்பெரிய மைல்கல்லைத் தொட்டுள்ளது. பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்று மருத்துவ விஞ்ஞானிகள் பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர்.

பன்றியின் சிறுநீரகம் உடலுக்கு வெளியே வைத்து அவரின் ரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு, மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படாமல் இயங்கியுள்ளது.

சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் “மிகவும் சாதாரணமாகத் இருந்தது” என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.

மேலும் முன்னர் இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடு மிக மோசமானதாகவும், கெரோட்டினின் அளவு அசாதாரணமாகவும் இருந்ததாக குறிப்பிடும் அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும், லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இனங்களுக்கு இடையான இடைவெளி குறைந்துள்ளது என தெரிவித்து உள்ளனர்.

Next Story