பாகிஸ்தான் தொடர்ந்து ‘கிரே’ பட்டியலில் நீட்டிப்பு


பாகிஸ்தான் தொடர்ந்து ‘கிரே’ பட்டியலில் நீட்டிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 5:18 PM GMT (Updated: 22 Oct 2021 5:18 PM GMT)

பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு இயங்கி வருகிறது.

இந்த குழு பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பது மற்றும் சட்டவிரோத பணமாற்றம் ஆகியவை எந்தெந்த நாடுகளில் அதிகளவில் நடைபெறுகிறது என்பதை கண்காணித்து, அவற்றை தடுப்பதற்கான கட்டளைகளை பிறப்பிக்கும்.

அந்த கட்டளையை நிறைவேற்றும் வரை சம்பந்தப்பட்ட நாடுகளை ‘கிரே' பட்டியல் என்று அழைக்கப்படும் மோசமான பட்டியலில் வைத்திருக்கும். இதன் மூலம் அந்த நாடுகளுக்கு உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ‘கிரே' பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க பாகிஸ்தான் 30 வகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எப்.ஏ.டி.எப். பட்டியலிட்டிருந்தது.

இந்தநிலையில் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழுவின் வருடாந்திர கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்க தவறியதால் பாகிஸ்தானை தொடர்ந்து ‘கிரே’ பட்டியலில் வைத்திருக்க முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு எப்.ஏ.டி.எப். விதித்த 30 கட்டளைகளில் 26 கட்டளைகளை இன்னும் நிறைவேற்றாததால் பாகிஸ்தானை தொடர்ந்து ‘கிரே’ பட்டியலில் வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக எப்.ஏ.டி.எப். தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு ஆண்டில் துருக்கி, ஜோர்டான், மாலி ஆகிய நாடுகள் புதிதாக ‘கிரே’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், போட்ஸ்வானா மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story