கொரோனா அதிகரிப்பு:சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Oct 2021 6:54 AM GMT (Updated: 26 Oct 2021 6:54 AM GMT)

சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங், 

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து கொரோனா அலைகள் உருவாகி வருகின்றன. 

சீனாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மீண்டும் பரவி வருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 223 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதும் அங்கும் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்நிலையில் சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபெய், ஃபுஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன. முன்னதாக சினோவாக், சினோபார்ம் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை சிறுவர்களுக்கு செலுத்த சீன அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து சீனாவின் பல்வேறு மாகாணங்களில் 3 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சீன பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தயங்குகின்றனர். எனினும் அரசின் கண்டிப்பான நடைமுறைகளால் சிறுவர்களுக்கு தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.


Next Story