தலீபான்களுடன் இணைந்து செயல்பட சர்வதேச சமூகத்திற்கு பாகிஸ்தான், சீனா வேண்டுகோள்


தலீபான்களுடன் இணைந்து செயல்பட சர்வதேச சமூகத்திற்கு பாகிஸ்தான், சீனா வேண்டுகோள்
x
தினத்தந்தி 27 Oct 2021 10:31 PM GMT (Updated: 27 Oct 2021 10:31 PM GMT)

தலீபான்களுடன் இணைந்து செயல்பட சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுப்பதாக பாகிஸ்தான், சீனா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

பீஜிங்,

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிதாக இடைக்கால அரசை அமைத்தனர்.

தலீபான்களின் இந்த இடைக்கால அரசை பெரும்பலான நாடுகள் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. எனினும் பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் தலீபான்களின் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் தலீபான் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் மற்றும் சீனா வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக இருநாடுகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆப்கானிஸ்தானில் தீவிரமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியில் உலகம் கவனம் செலுத்த வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்களின் துன்பத்தை தணித்து, அவர்களின் அவநம்பிக்கையை துடைத்தெறிய வேண்டும். ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்பவும், நாடு முழுவதுமாக வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் தலீபான் நிர்வாகத்துடன் தொடர்ந்து ஈடுபடுமாறு சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

Next Story