அமெரிக்காவில் கொரோனா சிகிச்சையில் 2 மாத்திரைகளுக்கு அனுமதி


அமெரிக்காவில் கொரோனா சிகிச்சையில் 2 மாத்திரைகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 5 Nov 2021 10:05 PM GMT (Updated: 5 Nov 2021 10:05 PM GMT)

கொரோனா சிகிச்சையில் 2 மாத்திரைகளை உருவாக்கி அமெரிக்க நிறுவனங்கள் அசத்தி உள்ளன.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலை இருந்தது. அது இப்போது மாறி இருக்கிறது. அடுத்தடுத்து 2 மாத்திரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக ‘மால்னுபிராவிர்’ என்ற வாய்வழி மாத்திரையை உருவாக்கி உள்ளனர்.

கொரோனா தொற்று உறுதியானவுடன் அல்லது அதற்கான அறிகுறிகள் தெரிந்த 5 நாளில் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலை, மாலை என இரு வேளை தலா ஒரு மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் தொற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். இந்த மாத்திரையை இங்கிலாந்து அரசின் எம்.எச்.ஆர்.ஏ. அமைப்பு அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக உலக அளவில் முதல் முறையாக அங்குதான் இந்த மாத்திரை பயன்பாட்டில் வருகிறது. இந்த மாத்திரை தொடர்பாக கடந்த மாதம் வெளியான தரவுகள், கொரோனா பெருந்தொற்றின் தொடக்கத்தில் இந்த மாத்திரையை கொடுத்தால், கடுமையான பாதிப்பில் உள்ளவர்கள் இறப்பதற்கான வாய்ப்பை பாதியாக குறைக்கலாம் என காட்டுகின்றன. இந்த மாத்திரை இங்கிலாந்தில் ‘லேகேவ்ரியோ’ என்ற பெயரில் சந்தைக்கு வர உள்ளது.

அதே சமயம் அமெரிக்காவில் புகழ்பெற்ற பைசர் மருந்து நிறுவனமும் ஒரு மாத்திரையை உருவாக்கி உள்ளது. இந்த மாத்திரையின் பெயர் ‘பேக்ஸ்லோவிட்’ ஆகும். இந்த மாத்திரையை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் காலை, மாலை என 2 வேளை 3 மாத்திரைகள் வீதம் எடுத்துக்கொள்ளலாம்.

இது பெரியவர்களில் நோய் தீவிரமாகி ஆஸ்பத்திரியில் சேர்ப்பதையும், மரணம் நேரிடுவதையும் 89 சதவீதம் குறைக்கிறது என பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரைக்கு விரைவில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தை (எப்டிஏ) கேட்டுக்கொள்வோம் என பைசர் நிறுவனம் கூறி உள்ளது.

Next Story