நைஜீரியா: கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் - 10 பேர் பலி


நைஜீரியா: கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் - 10 பேர் பலி
x
தினத்தந்தி 6 Nov 2021 5:32 AM GMT (Updated: 6 Nov 2021 5:32 AM GMT)

நைஜீரியாவில் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தலில் ஈடுபடும் ’பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. 

இந்த அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கடுனா மாகாணம் ஜங்கோ-கடஃப் நகரில் உள்ள யக்பக் மற்றும் அங்வான் ரகுகோ ஆகிய 2 கிராமங்களுக்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், கிராம மக்களின் வீடுகளையும் அந்த கும்பல் சூறையாடியது. 

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இரு கிராமங்களிலும் மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜங்கொ-கடஃப் பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

Next Story