எங்கள் ராணுவத்தை சீர்குலைக்க சீனா முயற்சி: தைவான் குற்றச்சாட்டு


எங்கள் ராணுவத்தை சீர்குலைக்க சீனா முயற்சி: தைவான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Nov 2021 9:02 PM GMT (Updated: 9 Nov 2021 9:02 PM GMT)

தங்கள் நாட்டு ராணுவத்தை சீர்குலைக்க சீனா முயற்சி செய்வதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.

தைபே, 

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப்போருக்கு பிறகு தைவான் தனிநாடாக உருவானது. ஆனாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.

தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டியும் வருகிறது. இந்த சூழலில் அண்மை காலமாக சீனா-தைவான் இடையிலான ராணுவ பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தைவானின் ராணுவத்தையும், நாட்டு மக்களின் மன உறுதியையும் சீர்குலைக்க சீனா முயற்சிப்பதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது. தைவானின் ராணுவ அமைச்சகம் சீன ராணுவ நடவடிக்கைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விரிவான அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சீனா தனது சொந்த பிரதேசம் என கூறிக்கொள்ளும் சுயாட்சி பெற்ற தைவான் குடியரசின் மீது அழுத்தத்தை அதிகரிக்க சீனா பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி வருகிறது. அந்த தந்திரங்களின் மூலம் தைவானின் ராணுவம் மற்றும் தைவான் மக்களின் மன உறுதியை சீர்குலைக்க சீனா முயற்சிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.

Next Story