35 நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்
சீனாவுடனான எல்லைக்கு அருகில் கட்டப்பட்டு வரும் புதிய நகரத்தை கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.
சியோல்,
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் கடந்த அக்டோபர் மாதம் வடகொரியாவின் ராணுவ கண்காட்சியில் கலந்து கொண்டார். அதற்கு பின் கிம் ஜாங் உன் எத்தகைய பொதுநிகழ்ச்சிகளிலும் தோன்றாமல் இருந்தது அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை எழுப்பியது.
உடல்நல பாதிப்பு காரணமாக அவர் பொதுவெளியில் தோன்றுவதைத் தவிர்த்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் எழுப்பி வந்தன.
இருப்பினும் இதனை மறுத்துள்ள வடகொரியா, அலுவல் பணிகளின் காரணமாக அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள கிம் ஜாங் உன்னின் தந்தையும், வடகொரிய முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் நினைவு தின நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் 35 நாட்களுக்கு பிறகு சீனாவுடனான எல்லைக்கு அருகில் கட்டப்பட்டு வரும் புதிய நகரத்தையும், அவரது குடும்பத்தினரால் போற்றப்படும் புனித மலையையும் பார்வையிட்டதாக, அரசு ஊடகம் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. கிம்மின் குடும்பத்தினால் போற்றப்படும் புனித மலையான மவுண்ட் பெக்டுவுக்கு அருகில் இந்த நகரம் உள்ளது.
வடகொரியாவின் வடக்கு அல்பைன் நகரமான சாம்ஜியோன், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், ஸ்கை ரிசார்ட் மற்றும் வணிக, கலாச்சார மற்றும் மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இது "சோசலிச உட்டோபியா" என்று அழைக்கப்படும் ஒரு பெரிய பொருளாதார நகரமாக மாற்றப்படுகிறது.
சர்வதேச தடைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட தாமதங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படவுள்ள மூன்றாவது மற்றும் கடைசி கட்ட கட்டுமானத்தை ஆய்வு செய்வதற்காக கிம் இங்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story