ரஷ்யாவின் செயற்கைக்கோள் ஏவுகணை மூலம் தகர்ப்பு - அமெரிக்கா கண்டனம்


ரஷ்யாவின் செயற்கைக்கோள் ஏவுகணை மூலம் தகர்ப்பு - அமெரிக்கா கண்டனம்
x
தினத்தந்தி 16 Nov 2021 8:51 PM GMT (Updated: 16 Nov 2021 8:51 PM GMT)

ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்று ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்டதால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

மாஸ்கோ,

கடந்த 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் முதல் முறையாக ‘ஸ்புட்னிக்-1’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தியது. அன்று தொடங்கி தற்போது வரை நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை உலக நாடுகள் விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. 

தகவல் தொடர்பு, இணைய சேவை, ஜி.பி.எஸ்., வானிலை முன்னறிவிப்பு என பல்வேறு தேவைகளுக்காக உதவும் இந்த செயற்கைக்கோள்கள், குறிப்பிட்ட காலத்தில் செயலிழந்து விடுகின்றன. இவ்வாறு செயலிழந்த செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் விண்வெளியிலேயே மிதந்து கொண்டிருக்கும். ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் சில சமயங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அவற்றை வெடிக்கச் செய்வதும் உண்டு. 

இவ்வாறு செயலிழந்த செயற்கைக்கோள்களின் பாகங்கள் ‘விண்வெளிக் குப்பைகள்’ என்று அழைக்கப்படும் விண்வெளிக் கழிவுகளாக மாறி விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும். இந்த விண்வெளி கழிவுகள் அவ்வப்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அச்சுறுத்தலமாக மாறி வருகின்றன.

கடந்த செம்படம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது விண்வெளி கழிவுகள் மோதும் சூழல் ஏற்பட்ட போது, விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி கழிவுகளுடன் மோதுவதை தவிர்க்க விண்வெளி நிலையத்தை குறிப்பிட்ட தூரத்துக்கு நகர்த்தினர்.

இவ்வாறு விண்வெளிக் குப்பைகளை கண்காணித்து அவற்றில் மோதாமல் இருப்பதற்காக செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை அவ்வபோது மாற்றுவதே விஞ்ஞானிகளுக்கு பெரும் பணியாக உருவெடுத்துள்ளது. இதனிடையே விண்வெளியில் ஒவ்வோர் ஆண்டும், முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவதால் விண்வெளிக் குப்பைகள் மேலும் அதிகரித்து வருகின்றன. 

இந்த நிலையில் ரஷ்யா மேற்கொண்ட ஆபத்தான ஏவுகணை சோதனையால், ரஷ்ய நாட்டின் செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா குற்றம் சாட்டியது. 

இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கூறுகையில், ரஷ்ய ராணுவம் தனது பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். 

மேலும் ஏவுகணை சோதனை மூலம் செயற்கைக்கோள் தகர்க்கப்பட்டது உண்மைதான் என்றும் இதனால் மற்ற செயற்கைக்கோள்களுக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதே சமயம் விண்வெளியில் அமைதியை சீர்குலைப்பதாக ரஷ்யா மீது அமெரிக்கா வைக்கும் குற்றச்சாட்டு ஒருதலைபட்சமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story