18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி; அமெரிக்கா செலுத்த தொடங்கியது


18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி; அமெரிக்கா செலுத்த தொடங்கியது
x
தினத்தந்தி 20 Nov 2021 7:45 PM GMT (Updated: 20 Nov 2021 7:45 PM GMT)

18 வயதான அனைவருக்கும் கொரோனாவுக்கு எதிராக ‘பூஸ்டர் டோஸ் ’தடுப்பூசி போடும் பணியை அமெரிக்கா தொடங்கிவிட்டது.

‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி

உலகளவில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இங்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ள மூத்த குடிமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக 3-வது டோசாக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதன் தரவுகள், கொரோனாவை தடுப்பதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என காட்டி உள்ளன.

18 வயதான அனைவருக்கும்...

இதையடுத்து 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடலாம் என்ற பரிந்துரையை சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ரோச்செல்லி வாலன்ஸ்கி செய்தார்.

அதைத் தொடர்ந்து, அங்கு 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட அந்த நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ. அங்கீகாரம் அளித்துள்ளது.

செலுத்தும் பணி தொடங்கியது

இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு தேசிய அளவில் 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

குளிர் காலத்தில் கொரோனா தொற்று பரவலை குறைக்க 50 வயதுக்கு மேற்பட்டோர் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியை எந்த வயதினர் போடுவது என்பதில் அமெரிக்காவில் ஒரு குழப்பம் நிலவியது.

இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின்படி, 18 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு 6 மாதங்கள் ஆகி இருந்தால், பைசர் அல்லது மாடர்னா என இரு தடுப்பூசிகளில் எதுவாகிலும் ஒன்றை பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ளலாம்.

இதுபற்றி சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆலோசகர் டாக்டர் மேத்யூ டேலி கூறுகையில், “இது ஒரு வலுவான பரிந்துரை ஆகும். எங்களால் முடிந்த அளவு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய விரும்புகிறேன்” என குறிப்பிட்டார்.

1 கோடிக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.


Next Story