மாயமான டென்னிஸ் வீராங்கனை பாதுகாப்பாக இருக்கிறாரா? - வீடியோவை வெளியிட்டது சீனா


மாயமான டென்னிஸ் வீராங்கனை பாதுகாப்பாக இருக்கிறாரா? - வீடியோவை வெளியிட்டது சீனா
x
தினத்தந்தி 21 Nov 2021 9:25 PM GMT (Updated: 21 Nov 2021 9:25 PM GMT)

மாயமான டென்னிஸ் வீராங்கனை பாதுகாப்பாக இருக்கிறாரா என்பது குறித்த வீடியோவை சீனா வெளியிட்டது.

பீஜிங்,

சீனாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் (வயது 35). கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான இவர், அண்மையில் அந்த நாட்டின் முன்னாள் துணை பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜாங் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்.

சமூக வலைத்தளம் மூலம் இந்த குற்றச்சாட்டை வெளியிட்ட நாள் முதல் பெங் சூவாய் மாயமானார். அவரின் கதி என்ன? என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் மாயமானதன் பின்னணியில் அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு பங்கு இருக்கலாம் என்கிற சந்தேகம் நிலவுவதால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இதனிடையே பெங் சூவாயின் பாதுகாப்பு மற்றும் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து உண்மையான ஆதாரங்களை அளிக்குமாறு சீனாவை ஐ.நா.வும், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. இது சீன அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பெங் சூவாய் பாதுகாப்பாக இருப்பதை காட்டும் வீடியோ ஒன்றை சீன அரசு ஊடகம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. சீன நேரப்படி நேற்று காலை தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற டீனேஜர் டென்னிஸ் போட்டியின் தொடக்க விழாவில் பெங் சூவாய் கலந்து கொண்டதாக கூறி அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதுதவிர பெங் சூவாய் தன் நண்பர்களுடனும், பயிற்சியாளருடனும் வெளியே சென்று உணவு அருந்துவது போன்ற இரு வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய இந்த வீடியோக்கள் போதாது என பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஸ்டீவ் சிமோன் கூறியுள்ளார்.



Next Story