இங்கிலாந்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இன்று முதல் பயண அனுமதி...!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Nov 2021 5:22 PM GMT (Updated: 22 Nov 2021 5:22 PM GMT)

இங்கிலாந்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இன்று முதல் பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லண்டன்,

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி, இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிக்கும் இங்கிலாந்து அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. 

முன்னதாக உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி கிடைத்தது. அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் இங்கிலாந்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இன்று முதல் பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் உள்ள தடுப்பூசிகளை அரசாங்கம் அங்கீகரிக்கும் என்று இங்கிலாந்து போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் இங்கிலாந்துக்கு வரும் அனைத்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பயண விதிகளையும் அந்நாட்டு அரசு எளிதாக்கியுள்ளது. அவர்கள் இப்போது எல்லையில் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களாகக் கருதப்படுவார்கள். இது தவிர சீனாவின் சினோவேக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளின் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பயணக்கட்டுப்பாடுகள் இருக்காது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. 

Next Story