ஆப்கானிஸ்தானில் டி.வி. நிகழ்ச்சிகளில் தோன்ற பெண்களுக்கு தடை...! தலீபான்கள் உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Nov 2021 12:03 AM GMT (Updated: 23 Nov 2021 12:03 AM GMT)

ஆப்கானிஸ்தானில் டி.வி. நிகழ்ச்சிகளில் பெண்கள் தோன்ற தடை விதித்து தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கடந்த ஆகஸ்டு மாத மத்தியில் தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர்.

தங்களின் முந்தைய ஆட்சியில் இருந்ததை போல (1996-2001) இந்த முறை கடுமையாக இருக்கப்போவதில்லை என்றும், பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்றும் தலீபான்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் மெல்ல மெல்ல கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் டி.வி. சேனல்களுக்கு தலீபான் அரசு 8 புதிய விதிமுறைகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், டி.வி. நிகழ்ச்சிகளில் இனி பெண்கள் தோன்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அவர்கள் டி.வி.யில் தோன்றும்போது தலையை மறைக்கும் ஆடையை அணிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மதத்தை கொச்சைப்படுத்தும் அல்லது ஆப்கானியர்களை புண்படுத்துவதாக கருதப்படும் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தடை; வெளிநாட்டு கலாசார மதிப்புகளை போற்றும் வெளிநாட்டுப் படங்களை ஒளிபரப்ப தடை ஆகியவையும் தலீபான்கள் விதித்துள்ள புதிய விதிமுறைகளில் அடங்கும்.

Next Story