ரஷியா: தீ விபத்தால் நிலக்கரிச்சுரங்கத்தில் சிக்கிய 75 தொழிலாளர்கள் - மீட்பு பணிகள் தீவிரம்


ரஷியா: தீ விபத்தால் நிலக்கரிச்சுரங்கத்தில் சிக்கிய 75 தொழிலாளர்கள் - மீட்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 25 Nov 2021 8:28 AM GMT (Updated: 25 Nov 2021 8:28 AM GMT)

ரஷியாவில் நிலக்கரிச்சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மாஸ்கோ,

ரஷியாவின் செர்பியா மாகாணத்தில் லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி சுரங்க நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள சுரங்கத்தில் இன்று 280-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

820 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சுரங்கத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 236 பேரை உயிருடன் மீட்டனர்.

ஆனால், இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 75 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இதையடுத்து, சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிய 75 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.       

விபத்து நடைபெற்று சில மணி நேரம் ஆனதால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

Next Story