அமெரிக்கா: பாம்பை விரட்ட முயன்று வீட்டை எரித்த நபர்..!


அமெரிக்கா: பாம்பை விரட்ட முயன்று வீட்டை எரித்த நபர்..!
x

அமெரிக்காவில் பாம்பை புகை வைத்து விரட்ட முயன்ற போது எதிர்பாராதவிதமாக வீடு எரிந்ததால், வீட்டின் உரிமையாளர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் பூல்ஸ்வில்லே என்கிற பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் அதிக விஷம் கொண்ட பாம்புகள் நிறைந்துள்ளன. எதிர்பாராதவிதமாக ஒரு நாள் பாம்பு ஒன்று அவரது வீட்டிற்குள் நுழைந்துவிட்டது. உடனே அதை விரட்ட எண்ணிய அவர் புகையை பயன்படுத்தி பாம்பை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

அந்த பகுதியில் எளிதில் பற்றிக்கொள்ள கூடிய வகையிலான பொருட்கள் இருந்ததை மறந்த அவர் நெருப்பு புகையை பயன்படுத்தி பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் சற்றும் எதிர்பாராதவகையில் வீட்டிலுள்ள பொருட்கள் மீது தீப்பற்றி, வீட்டின் கீழ்தளம் தொடங்கி சுவர்கள் என அனைத்திலும் தீப்பற்றி வீடு முழுவதும் எரிய தொடங்கியது.

இதனையடுத்து வீடு கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு ஒருவழியாக தீயை அணைத்தனர். இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை, வீட்டிற்குள் நுழைந்த அந்த பாம்பும் உயிருடன் இருந்துள்ளது. அதனை மீட்ட தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டுவிட்டனர். ஆனால் பாம்பை விரட்ட முயன்றவரின் வீடு எரிந்ததால், வீட்டின் உரிமையாளர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

Next Story