கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் ஒமைக்ரான்: ரஷிய நிபுணர்


கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் ஒமைக்ரான்: ரஷிய நிபுணர்
x
தினத்தந்தி 4 Dec 2021 5:37 PM GMT (Updated: 4 Dec 2021 5:37 PM GMT)

ஒமைக்ரான், கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்று ரஷிய நிபுணர் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வைரஸ்

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கிய உருமாறிய கொரோனா ஒமைக்ரான் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

10 நாட்களுக்குள் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த உருமாறிய வைரஸ் கால் தடம் பதித்து விட்டது. இன்னும் அது தன் ஆதிக்கத்தைப் பரப்புவதில் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் உலகமெங்கும் கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் கடுமையாகி வருகின்றன.

ஆபத்தானது அல்ல

உரு மாறிய இந்த ஒமைக்ரான், 3 மடங்கு வேகமாக பரவுகிற ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்ற தகவல் வெளிவந்து பொதுமக்களை கதி கலங்க வைத்துக்கொண்டிருந்தாலும்கூட ஒரு ஆறுதலான தகவலும் வந்து இருக்கிறது.

இந்த ஆறுதலான தகவலை தந்திருப்பவர், உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கிய ரஷியாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர் பேராசிரியர் அனட்டோலி ஆல்ட்ஸ்டீன் ஆவார்.

இவர் ஸ்புட்னிக் ரேடியோவுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

உருமாறிய டெல்டா வைரஸ் போய் விடும். அந்த இடத்துக்கு ஒமைக்ரான் வந்து விடலாம். ஆனால் இந்த பெருந்தொற்று அவ்வளவு ஆபத்தானது அல்ல. தற்போது 3 சதவீதம்பேர் இறக்கின்றனர்.

கொரோனா முடிவுக்கு வரும்

ஒமைக்ரான் வைரஸ் பரவினால், நோய் கிருமித்தன்மை குறைய வாய்ப்பு உண்டு.

கொரோனா வைரஸ் காய்ச்சலுடன் ஒப்பிடத்தக்கது என்ற நிலைக்கு வந்தால், நாங்கள் பெருந்தொற்று முடிவுக்கு வந்து விடுவதாக கருதுவோம். எனவே இந்த பெருந்தொற்று, ஒமைக்ரானுடன் முடிவுக்கு வந்த விட வாய்ப்பு இருக்கிறது.

புத்தாண்டுக்கு முன்பாக ஒமைக்ரான் பரவி விடாது. அறிவியல் தரவுகள்படி பார்த்தால் ஒமைக்ரான் வைரசை பொருத்தமட்டில் நோயின் தீவிர போக்கை ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘எந்த ஆதாரமும் இல்லை’

இதே போன்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகமும் ஒரு ஆறுதல் தகவலை கூறுகிறது

ஒமைக்ரான் வைரசுடன் தொடர்புடைய அறிகுறிகள், பிற உரு மாறிய வைரஸ்களைக் காட்டிலும் வேறுபட்டவை அல்லது தீவிரமானவை என்பதற்கோ, தற்போதுள்ள தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் இந்த புதிய வைரசுக்கு எதிராக பயனற்றவைதான் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறுவதாக சேனல் நியூஸ் ஆசியா தெரிவித்தது.

சிங்கப்பூரில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்தது.

Next Story