இலங்கை நபர் எரித்து கொலை; 'இளமையின் குதூகலம், எப்போதும் நடப்பதுதான்’ - பாக்.மந்திரி சர்ச்சை பேச்சு


இலங்கை நபர் எரித்து கொலை; இளமையின் குதூகலம், எப்போதும் நடப்பதுதான்’ - பாக்.மந்திரி சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 6 Dec 2021 4:26 PM GMT (Updated: 6 Dec 2021 4:26 PM GMT)

பாகிஸ்தானில் இலங்கை நபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ‘இளமையின் குதூகலம்’ மற்றும் இது ‘எப்போதும் நடப்பது தான்’ என பாகிஸ்தான் மந்திரி கூறினார்.

லாகூர்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சைலகோட் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றிவந்தவர் பிரியந்தா குமரா. இலங்கையை சேர்ந்த குமரா தாண் பணிபுரியும் தொழிற்சாலையின் வெளிச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரோட்டியை கடந்த வெள்ளிக்கிழமை கிழித்துள்ளார். தெக்ரிக் - இ - லெப்பை பாகிஸ்தான் அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டிருந்த அந்த சுவரோட்டியில் மதம் சார்ந்த வாசகங்களும் இடம்பெற்றுள்ளது.

சுவரோட்டியை பிரியந்தா கிழிப்பதை பார்த்து ஆத்திரமடைந்த தெக்ரிக் - இ - லெப்பை அமைப்பினர் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் தங்கள் மத உணர்வுகளை புண்டுத்தியதாக பிரியந்தா குமராவை கடுமையாக தாக்கினர்.

தொழிற்சாலைக்கு வெளியே பரபரப்பான சாலையில் திரண்ட 800-க்கும் மேற்பட்டோர் பிரியந்தா குமராவை சரமாரியாக தாக்கினர். நடு ரோட்டில் வைத்து அவரை தாக்கிய கும்பல் பிரியந்தா குமாராவை தீ வைத்து எரித்துக்கொன்றனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எரித்து கொல்லப்பட்ட குமாராவின் உடல் இன்று இலங்கை சென்றடைந்தது.

இந்நிலையில், இலங்கை நபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ‘இளமையின் குதூகலம்’ மற்றும் இது ‘எப்போதும் நடப்பது தான்’ என பாகிஸ்தான் மந்திரி கூறினார். இலங்கை நபர் எரித்துக்கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி பர்வேஷ் ஹடகிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த பர்வேஷ், இது இஸ்லாமிய இளைஞர்களின் இளமை குதூகலம். இது எல்லா நேரத்திலும் நடக்கும். இஸ்லாமிய மதம் தாக்கப்பட்டதாக இளைஞர்கள் உணர்ந்தால், அதை காக்க இளைஞர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள்’ என்றார்.

Next Story