கொடூரத்தின் உச்சம்: திருடியதாக 4 பெண்கள் அடித்து உதைத்து வீதியில் நிர்வாண ஊர்வலம்


கொடூரத்தின் உச்சம்: திருடியதாக 4 பெண்கள் அடித்து உதைத்து வீதியில் நிர்வாண ஊர்வலம்
x
தினத்தந்தி 9 Dec 2021 8:56 AM GMT (Updated: 9 Dec 2021 8:56 AM GMT)

கடையில் திருடியதாக 4 பெண்கள் அடித்து உதைத்து வீதியில் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துசேலப்பட்ட கொடூரம் நிகழ்ந்து உள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் உள்ள கடை வீதியில் கடந்த 6 ந்தேதி  4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்துச் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இளம்பருவத்தைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பெண்களை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, கம்புகளால் சிலர் அடித்தும் தர தரவென இழுத்தும் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர்.

பெண்கள் தங்களை விடுவிக்குமாறு மக்களிடம் அழுது மன்றாடினர், ஆனால்  யாரும் அந்த பெண்களுக்கு உதவாமல் இருந்தது காண்போரை கலங்கச் செய்துள்ளது. அந்த பெண்கள் சுமார் ஒரு மணி நேரம் இந்த கொடூரத்தை அனுபவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பஞ்சாப் மாகாண போலீசார் இதில் தொடர்புடைய 5 பேரை  கைது செய்துள்ளனர். பாகிஸ்தானிய கொள்கை ஆய்வாளரும் பத்திரிகையாளருமான ரஸா அகமது ரூமி இந்த சம்பவத்தை "மிருகத்தனமானது" மற்றும் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார். 

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆயிஷா சித்கா கேள்வி எழுப்பினார்: "அரசு இறந்துவிட்டதா மற்றும் நீதியை வழங்க முடியாமல் மக்களைத் தண்டிக்கக் கூட கும்பல் நீதிதான் ஒரே வழி? என கூறி உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் நடந்த சம்பவங்கள் குறித்து விவரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “அன்றைய தினம் பாவா சாக் மார்க்கெட்டுக்கு குப்பை பொருட்களை சேகரிக்க சென்றோம். மிகவும் தாகமாக இருந்ததால் உஸ்மான் எலக்ட்ரிக் கடைக்குள் சென்று தண்ணீர் கேட்டோம்.  ஆனால் தண்ணீர் கேட்ட எங்களை திருட வந்தவர்களாக நினைத்த அக்கடையின் உரிமையாளர் சதாம் எங்களை சிலருடன் சேர்ந்து கொண்டு தாக்கினார்.

எங்களை குண்டுக்கட்டாக தூக்கி ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, குச்சிகளால் அடித்து சாலைகளில் ஊர்வலமாக கூட்டிச் சென்றனர். அங்கிருந்த ஒருவர் கூட எங்களுக்கு உதவவில்லை” என அவர் கூறினார். கடந்த வாரம், பாகிஸ்தானின் சியால்கோட்டில் ஒரு தொழிற்சாலை அதிகாரி  ஒரு கும்பலால் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Next Story